Thursday 20 October 2011

சில கவிதைகள்

கடவுளை நேசித்தல் 

டவுளை ஒருபோதும்
நான் நேசித்ததேயில்லை.
பயம், துக்கம், நோய், விபத்து
பயணம் செய்யும்போது
அம்மாவின் முந்தானையாய்
அவருடைய பேர் பிடித்துப்
பதுங்கி இருப்பேன்.
அவமானம், நிராசையின்போது
அவரை நிந்தித்திருக்கிறேன்.
ஆசைகள் பலிக்க
உண்டியலில் காசு போட்டு
டீல் பேசி வியாபாரியாக்கி
இருக்கிறேன் அவரை.
நாள் கிழமையில்
அவர் பேர் சொல்லி
விதவிதமாய்
உண்டிருக்கிறேன்.
ஒரு படத்துக்குள் அடைத்து
வீட்டில் வைத்தவுடன்
அவர் அதில் மட்டும் இருப்பதாக
நம்பி இருக்கிறேன்.
அவர் தந்ததை
அவருக்கே படைத்து
நான் செலுத்தியது எனப்
பெருமையுற்றிருக்கிறேன்.
எனக்குத் தந்தது
போதும் என நினைத்து
எப்போதாவது அவர் எனக்கு
வஞ்சகம் செய்திருப்பாரோ எனச்
சந்தேகப்பட்டிருக்கிறேன்.
என்னை முன்னேறவிடாமல்
தடுத்ததுபோல் திட்டி இருக்கிறேன்.
என்னை எப்போது உயர்த்துவாய் என
எந்நேரமும் கேட்டபடி இருக்கிறேன்.
என்னை யாராவது
காயப்படுத்தும்போது
கேட்க மாட்டாயா நீ எனக்
கத்தித் தீர்த்திருக்கிறேன்.
கடவுளை ஒருக்காலும்
நான் நேசித்ததே இல்லை என்ற
உண்மையை உணரும்போது
சங்கடமாக இருக்கிறது
அவராவது என்னை
நேசித்திருப்பாரா என்று.
- தேனம்மை லெட்சுமணன் 

ரயில் - சில சித்திரங்கள்   



காடுமேடெல்லாம்
தறிகெட்டு ஓடினாலும்
அறிவிக்கப்பட்ட
நடைமேடையில்
இடுப்பை மெதுவாய்
வளைத்து நெளித்து
காத்திருப்போரின்
கால்களை எல்லாம்
நக்கியபடி வந்து நிற்கும் ரயில்
ஆக சாந்தமான ஒரு
வளர்ப்புப் பிராணி
என்பதை அறிக.
 'எப்போ கார் வாங்கப்
போறீங்க?’ பின் சீட்டிலிருந்து
மனைவி கேட்கிறாள்.
டூ வீலர் லோனுக்கான தவணை
எப்போது முடியும் என்பதை
யோசித்துக்கொண்டிருக்கிறேன் நான்.
'ரயில் வாங்கலாம்பா’ என்கிறான்
பெட்ரோல் டேங்கில்
உட்கார்ந்திருக்கும்
என் பிள்ளை.
அன்றாடம் பார்க்கும்
ரயில்தான் என்றாலும்
ஆற்றில்
துவைத்துக்கொண்டிருப்பவர்கள்
அண்ணாந்து பார்க்கவே செய்கிறார்கள்
பாலத்தில் போகும் ரயிலை.
- எஸ்.பாபு

காட்சி


காட்சி ஆரம்பித்தது
கதை நாயகி குளித்துக்கொண்டிருந்தாள்
வில்லன் அதை
விஷமத்தனமாகப்
பார்த்துக்கொண்டிருந்தான்
'உன் அக்கா தங்கச்சிய
இப்படிப் பாப்பியடா...’
வசனம் பேசி
சண்டையிட்டான் கதை நாயகன்
நாயகனுக்கு நன்றி சொல்லிவிட்டு
குளிக்க ஆரம்பித்தாள் நாயகி
நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம்!
ஆ.கீதம் லெனின்  

மறைவிடம்

தோட்டத்தில்
சிறுவர்கள் அனைவரும்
ஒளிந்து விளையாடினர்
ஒவ்வொருவரும்
ஒரு மறைவிடம் தேடி ஒளிந்தார்கள்,
மறைவிடம் கிட்டாத சிறுமி மட்டும்
மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டாள்
சிறுமிக்குப் பின்னால்
ஒளிந்துகொண்டது மரம்!
 

No comments:

Post a Comment